திறமையான நிர்வாகத்தை நடத்திய பிரபாகரன் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது

போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன் அவர் அவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரங்கள்,சாட்சியங்கள் உண்டு என்றும் கேள்வியெழுப்பினார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்பில் ஜோன் அமரதுங்கவின் தலைமையில் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக ஒரு கூட்டம் நடந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன்.

அப்போது குறித்த திணைக்களத்தின் தலைவர் கலாநிதி சமரக்கோன் குறிப்பிடும் போது 2009 மே மாதம் வரை வடக்கில் எந்தப் பகுதியிலும் எந்தவொரு போதைப் பொருளும் காணப்படவில்லை என்றும் போதைப்பொருள் விநியோகமும் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். போதைப் பொருளே இருந்ததில்லை என்றார் அவர்.

எனவே 2009 மே மாத்திற்கு பின்னரே வடக்கில் போதைப் பொருள் பாவனையும், விநியோகமும் காணப்படுகிறது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது நான் அவரிடம் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் என அதிகளவான முப்படையினர் உள்ள ஒரு இடத்தில் எவ்வாறு போதைப்பொருள் வருகிறது?. புலிகளின் காலத்தில் இல்லாதது இப்போது வருகிறது என்றால் வேலியே பயிரை மேய்கிறதா என்றொரு கேள்வியை கேட்டிருந்தேன்.

2009 க்கு முன் வடக்கில் எந்தவொரு போதைப் பொருளும் இல்லை என்றால் அந்தளவுக்கு திறமான நிர்வாகத்தை நடத்தியிருந்த பிரகாகரனை இவ்வாறு ஜனாதிபதி மோசமாக சித்தரிப்பது கவலையையும் மனவருத்தத்தையும் தருகிறது. எதுவும் இல்லாது எடுத்த எடுப்பில் ஆதாரம் இல்லாத ஒரு கருத்தை ஜனாதிபதி கூறியது தவறாகும் என்றார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை