இனங்காணப்படாத நோயால் உயிரிழக்கும் கால்நடைகள்

மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின் காரணமாக ஏராளமான கால் நடைகள் உயிரிழந்துள்ளதாக உயிலங்குளம் நல்லாயன் கால்நடை உரிமையாளர் ஒன்றியம் தெரிவித்தது.

குறித்த பிரச்சினை தொடர்பாக உயிலங்குளம் நல்லாயன் கால்நடை உரிமையாளர் ஒன்றிய உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மன்னார் பிரதேச செயலாளருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின் காரணமாக ஏராளமான கால் நடைகள் உயிரிழந்துள்ளன. முன்னைய காலங்களில் எமது மாவட்டத்தில் இறைச்சி, பால், மாட்டெரு போன்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எமது கால்நடை வளர்ப்பாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதிகமான குடும்பங்கள் கால்நடையினை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களாக உள்ளது. கால்நடைகளின் இழப்பு குடும்பங்களிலே பாரிய துயரத்தையும் கஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கஸ்டத்தின் காரணமாக சில பிள்ளைகள் பாடசாலைக்கு கூட செல்வதில்லை. காரணம் அன்றாடம் கிடைக்கின்ற பாலை விற்றுத்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

கால் நடைகள் உயிரிழக்கின்றமை தொடர்பாக மிருக வைத்தியரை சந்தித்து மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் இன்று வரை பல கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.

சில கால்நடை உரிமையாளர்களின் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு இதுவரை எவ்வித நஷ்ட ஈடும் வழங்கப்படாமையினால் அவர்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப் பிரச்சினை தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மன்னார் குறூப் நிருபர்

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை