வளைகுடாவுக்கு விரையும் பிரிட்டனின் போர்க் கப்பல்

ஈரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடாவுக்கு தனது இரண்டாவது போர்க் கப்பலை அனுப்பும் திட்டத்தை பிரிட்டன் முன்னெடுத்துள்ளது.

தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் எச்.எம்.எஸ் டன்கன் போர்க் கப்பல் அடுத்த வாரம் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் போர்க்கப்பலுடன் பாதுகாப்பு பணியில் இணையவுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க் கப்பலான எச்.எம்.எஸ் மெண்ட்ரோஸ் மூன்று ஈரானிய படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்தே, அந்தப் பகுதிக்கு இரண்டாவது போர்க் கப்பலை அனுப்ப பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த வாரம் ஜிப்ரால்டர் கடற்பகுதியில் ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை பிரிட்டன் கடற்படையினர் பிடித்திருந்தனர். அக்கப்பலை விடுவிக்குமாறு பிரிட்டனை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆபத்தான விளையாட்டில் பிரிட்டன் தலையிட வேண்டாம் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சியிடம் அரசு அதிகாரி ஒருவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் மற்றும் ஈரான் இடையேயான உறவு, அண்மைய வாரங்களில் அதிக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை