ஈரான் அணு ஒப்பந்தத்தை காக்க வியன்னாவில் பேச்சு

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் கப்பல்கள் கைப்பற்றப்படுவது தொடர்பாக நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை காப்பாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன.

வியன்னாவில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீன நாட்டு அதிகாரிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு மூத்த ஈரான் நாட்டு அதிகாரி, பேச்சுவார்த்தை நடந்த சூழல் “மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.

2015 ஈரான் ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு திரும்பப்பெற்ற அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்த பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைய ஆரம்பித்தது.

தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறி, டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாபின், ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

அண்மையில் வளைகுடா பகுதியில் நடந்துவரும் சம்பவங்களால் தாங்கள் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் இம்மாத ஆரம்பத்தில் தெரிவித்தனர்.

இவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், “மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததுடன், வளைகுடா பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு வழியை உருவாக்குவதற்கும் இது சரியான நேரம்” என்று குறிப்பிடப்பட்டது.

மேலும் இந்த மாத ஆரம்பத்தில் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் ஈரானுக்கு உள்ளதாக குறிப்பிட்ட அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் கடமைகளை சரியாக செய்ய தவறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த மே மாதம், ஈரான் மீதான தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலுப்படுத்தினார். குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பின்னர் அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்துக் கொள்வதாக ஈரான் தெரிவித்தது.

அதனை அடுத்து சில தடைகளை விதித்தது அமெரிக்கா.

அதன் பின் அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியது. அதனை அடுத்து, ஹோர்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரித்தார்.

ஆனால், தங்களது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று ஈரான் கூறியது. மேலும் அண்மையில் ஈரான் தடுத்து வைத்துள்ள பிரிட்டன் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என அந்நாடு கூறியது. இதற்கு எதிர்மறையான கருத்துக்கள் ஈரான் தரப்பில் இருந்து வர வளைகுடா பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது நடந்த பேச்சுவார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை