ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட தொடர்: இலங்கை அணி நாடு திரும்பியது

ஜப்பான் கஷிமா விளையாட்டு மையத்தில் நடைபெற்று வந்த ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் விளையாடிய இலங்கை அணி, ஹொங்கொங் அணியை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

இலங்கை அணி தங்களுடைய அரையிறுதிப் போட்டியில் மலேசிய அணியிடம் 54--72 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த நிலையில், ஹொங்கொங் அணி 36--62 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கபூர் அணியிடம் வீழ்ந்திருந்தது. இவ்வாறான நிலையில், இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதிய நிலையில், இலங்கை அணி 75--49 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இரண்டு காற்பகுதிகளில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன. போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு புள்ளிகள் முன்னிலையுடன் முதல் காற்பகுதியை இலங்கை நிறைவுசெய்ய முற்பட்ட போதும், இறுதியில் 17--16 என இலங்கை முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது காற்பகுதியில் அதே முன்னிலையுடன் இலங்கை அணி ஆட, 34--33 என முதல் பாதி நிறைவடைந்தது.

போட்டியின் மூன்றாவது காற்பகுதியில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மலிந்து குமாரி கமகே அணியில் மாற்றங்களை ஏற்படுத்த, இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு முன்னிலையை அதிகரித்துக்கொண்டது.

கோல் காப்பாளராக அணிக்குள் வந்த கன்யா சேனாநாயக்க எதிரணியின் கோல் முயற்சிகளை கட்டுப்படுத்த இலங்கை அணி மூன்றாவது காற்பகுதியில் சிறந்த முன்னேற்றத்தை கண்டது.

ஒருபக்கம் எதிரணியின் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட மறுமுனையில் புள்ளிகளை குவித்த இலங்கை அணி மூன்றாவது காற்பகுதி நிறைவில் 59--40 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்றது. இதேபோன்று நான்காவது காற்பகுதியில் முன்னிலையை தக்கவைத்துக்கொண்ட இலங்கை அணி 75--49 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக இலங்கை இளையோர் அணி 2021ம் ஆண்டு பீஜியில் நடைபெறவுள்ள இளையோர் வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ளது.

இவ்வருடம் நடைபெற்ற இளையோர் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியனாகிய சிங்கபூர் அணியை 57--48 என வீழ்த்திய மலேசிய அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை