தரமுயர்த்தாவிடின் அரசுக்கான ஆதரவை வாபஸ்பெறுவோம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரம் உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சீ.யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த யோகேஸ்வரன் எம்.பி கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடக்கூடாதென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் எம்.பி.யான ஹரிஸும் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்கின்றது. இந்த அரசையும் ஜனாதிபதியையும் பிரதமரையும் கொண்டு வந்தவர்கள் நாங்கள். அந்த நன்றிக்கடன் அரசாங்கத்துக்கு இருக்கின்றதா? எனக்கேட்க விரும்புகின்றோம்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக அரசு தரமுயர்த்தாவிட்டால் அரசுக்கான தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும்.

தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

எனினும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நாம் ஆதரவளித்து வருகின்றோம். இனியும் எமது மக்களை நாம் சமாதானப்படுத்த முடியாது.

எனவேதான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை ஏற்படக்கூடாதெனில் அங்கு தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் யோகேஸ்வரன் எம்பி மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை