முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் ஒரு சுமுக தீர்வை எட்டலாம்

கல்முனை பிரதேச செயலகம் விடயம் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொள்வதோடு, கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது தமிழ் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள். 

எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் ஒரு சுமுகமான தீர்வை எட்ட முடியுமென விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

கல்வி அமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண நுவரெலியா, ஹங்குரன்கெத்த, முல்லோயா தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டடம் (21) விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மொழி ரீதியாக ஒன்றுபட்டு இருக்கும் நாங்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் நடந்தோமேயானால் இந்த இரண்டு இனத்துக்கும் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும்.

தமிழ் மொழியை பேசக்கூடிய தமிழ் இனத்தவர்களும், முஸ்லிம் இனத்தவர்களும் கடந்த காலங்களில் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் பல உரிமைகளைப் பெற்றிருக்க முடியும்.  எனவே, கடந்த காலங்களைப் போல் செயற்படாமல் சிந்தித்து ஒற்றுமையாக செயற்பட முஸ்லிம் தலைவர்கள் முன்வருவார்களேயானால், இனங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படாது சுமுகமான தீர்வை பெற்றுக்கொள்ளலாம். 

அதிகமாக தமிழ் மக்கள் வாழும் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலகத்தை தமிழ் மக்களுக்கு விட்டுக் கொடுத்து அதன் மூலமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற உறவை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். 

ஹற்றன் சுழற்சி நிருபர் 

 

Sun, 06/23/2019 - 11:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை