முஸ்லிம்களின் பிறப்பு வீதம்;
முஸ்லிம்களின் பிறப்பு வீதம் தொடர்பில் தேவையற்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டுகின்றார்.
முஸ்லிம்கள் நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களாக மாறிவிடப் போகின்றனர் என்ற தேவையற்ற அச்சத்தை உருவாக்க
சிலர் முயற்சிக்கின்றனர். எப்போதும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினரான உதய கம்மன்பில தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி, முஸ்லிம்களின் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் சனத்தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார். அவர் முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை. இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றார். அவருடைய தகவல்கள் தவறானவை என்பதை நிரூபிக்க தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் ஹக்கீம் அழைப்பு விடுத்தார்.
முஸ்லிம்களின் பிறப்பு வீதம் அதிகரித்து வரும் அதேநேரம், சிங்களவர்களுக்கு எதிராக கருத்தடைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கூறப்படும் கருத்துக்கள் யாவும் கட்டுக்கதைகளே. சிங்கள பௌத்தர்களின் இளம் சமுதாயத்தைவிட முஸ்லிம் இளம் சமுதாயம் கணிசமானளவு அதிகரித்துள்ளது. இதற்கிடையிலான விகிதாசாரத்தில் பாரிய வேறுபாடு இருப்பதாக கம்மன்பில சுட்டிக்காட்டியிருந்தார்.
குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் தகவல்களுக்கமைய அவ்வாறான கணிசமான அதிகரிப்புக்கள் எதுவும் இல்லை. நான்கு வயதிலிருந்து 14 வயது வரையானவர்களின் சனத்தொகையில் பாரிய வேறுபாடு இருப்பதாகக் கூறியிருந்தார். அவர் மக்களைப் பிழையாக வழிநடத்துகின்றார். அவர் கூறும் விகிதாசரம் ஒட்டுமொத்த முஸ்லிம் சனத்தொகையில் குறிப்பிட்ட வயதினரின் விகிதாசாரமாகும். இலங்கையில் 1.8 மில்லியன் முஸ்லிம்களே இருக்கின்றனர். எனினும், சிங்களவர்களின் எண்ணிக்கை 15.2 வீதத்துக்கும் அதிகமாகும். அவர் முன்வைக்கும் விகிதாசாரம் முஸ்லிம் சனத்தொகையில் குறிப்பிட்ட வயது எல்லையைக் கொண்டவர்களின் எண்ணிக்கையாகும். இதன் அடிப்படையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறவது அடிப்படையற்றதாகும் என்றார்.
1881ஆம் ஆண்டிலேயே முதலாவது குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. அதன்போது 1.6 மில்லியன் சிங்களவர்கள் இருந்தனர். அப்போது முஸ்லிம்களுக்கு சிங்களவர்களுக்கும் இடையில் 1.5 மில்லியன் வித்தியாசம் காணப்பட்டது. 2012ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டுக்கு அமைய சிங்களவர்களின் சனத்தொகைக்கும், முஸ்லிம்களின் சனத்தொகைக்கும் இடையிலான வித்தியாசம் 12.5 மில்லியன்களாகும். அதாவது 100 மடங்கிற்கும் அதிகமான வித்தியாசமாகும். முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பான்மையானவர்களாக மாறிவிடுவார்கள் எனக் கூறுவது அர்த்தமற்றதாகும் என்றார்.
மகேஸ்வரன் பிரசாத்
from tkn