விக்கினேஸ்வரன் நம்பிக்கை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை உண்டு. எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர், நீங்கள் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட தயார் என எழுதிய கடிதத்தை அவர்கள் பகிரங்கமாக ஊடகங்களில் வெளிப்படுத்தியது தொடர்பாக உங்களது கருத்து என்ன என வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
என்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து இணங்கிபோவம் என்ற நம்பிக்கை இருக்கிறது. முஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன.
அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று, தமக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தமது சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள். இது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் காணகூடியதாக இருக்கிறது.
இதேவேளை தமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது.
நாங்கள் மட்டும் தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால் தான் எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது.
எனவே முஸ்லிம்களின் இச் சம்பவத்தை வைத்துக்கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
கிளிநொச்சி குறூப் நிருபர்
from tkn