வடக்கு - கிழக்கில் 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

எதிர்வரும் 29ஆம் திகதி கடிதங்கள் கையளிப்பு  

வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு  எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.  

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர்  வழங்கவுள்ளனர்.  

வடக்கு - கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பின் தரம் III இற்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த மார்ச் 14ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.  

அதற்கமைய வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 1,302 பேர் பங்குபற்றினர். அவர்களில் அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட தகைமைகளை முழுமை செய்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு 29ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.  

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்  

Thu, 06/06/2019 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை