ஆசிய சம்பியன்ஷிப் தொடர்: இலங்கை

உட்பட 46 அணிகள் பங்கேற்பு

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டியில் 2020ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான குழு நிலைப்படுத்தும் குலுக்கல் நிகழ்வு கடந்த (11) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.

இந்த குழுக்கல் நிகழ்வின் மூலமாக போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை உட்பட 46 அணிகள் பெயரிடப்பட்டிருந்ததுடன், அணிகள் கிழக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தெற்கு பிரிவில் மொத்தமாக A, B, C, D, E மற்றும் F என 6 குழுக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு பிரிவில் G, H, I, J மற்றும் K என 5 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன

தெற்கு பிரிவு (West Zone)

தெற்கு பிரிவின் ஏ குழுவில் ஐந்து முறை சம்பியன் பட்டத்தை வென்ற ஈராக் அணி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த குழுவில் ஓமான், பலஸ்தீன். குவைட் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன. இதேவேளை. பி குழுவில் 2014 சம்பியன் மற்றும் 2018ம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறிய கட்டார் அணியுடன், யெமன், துர்க்மெனிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. பி குழுவுக்கான போட்டிகள் யாவுமு் கட்டாரில் இடம்பெறவுள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டி தொடரில் இலங்கை அணி பி குழுவில் பங்களாதேஷ், மாலை தீவுகள், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய அணிகளுடன் விளையாடியிருந்தது. இதில், மாலை தீவு அணிக்கு எதிரான முதல் போட்டியை 2-2 என சமப்படுத்தியிருந்த இலங்கை அணி, அடுத்த குழுநிலை போட்டிகளில் மொத்தமாக 20 கோல்களை விட்டுக்கொடுத்து குழு நிலையுடனேயே தொடரில் இருந்து வெளியேறியிருந்தது. இதேவேளை, 2018ம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியிருந்த தஜிகிஸ்தான் அணி சி குழுவில் இடம்பெற்றுள்ளது. குறித்த குழுவில் மாலை தீவு, லெபனான் மற்றும் 1994ம் ஆண்டு சம்பியனான சிரியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

நான்கு முறை சம்பியனான ஈரான் அணி கடந்த முறை இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டித் தொடரில் பங்கேற்காத போதும், இம்முறை குழு டி யில் இடம்பெற்றுள்ளது. ஈரானுடன், கிர்கிஸ்தான், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதேநேரம், ஈ குழுவில் ஜோர்தான், பஹ்ரைன், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், நடப்பு சம்பியன் சவூதி அரேபியாவுடன், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் எப் குழுவில் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு பிரிவு (East Zone)

கிழக்கு பிரிவினை பொறுத்தவரை இம்முறை 5 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கடந்த பருவகாலத்தில் கோல் வித்தியாசம் காரணமாக வாய்ப்பை தவறவிட்டிருந்த கம்போடியா அணியுடன், தாய்லாந்து, மலேசியா, புரூணை மற்றும் வடக்கு மரியானா தீவுகள் அணிகள் G குழுவில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் கடந்த பருவகாலத்தில் குழுநிலை போட்டிகளுடன் வெளியேறிய சீன தைபே, அவுஸ்திரேலியா, லாவோஸ் மற்றும் மக்காவு ஆகிய அணிகள் எச் குழுவிலும், 7 தடவைகள் சம்பியனாகியுள்ள மியன்மார், சிங்கபூர், சீனா மற்றும் 12 முறை சம்பியனாகியுள்ள கொரியா குடியரசு ஆகிய அணிகள் I குழுவில் இடம்பெற்றுள்ளன.

வியட்நாம், குவாம், மொங்கோலியா மற்றும் 2016ம் ஆண்டு சம்பியனான ஜப்பான் ஆகிய அணிகள் ஜே குழுவிலும், வட கொரியா, இந்தோனேசியா, டிமோர் லெஸ்டெ மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் கே குழுவிலும் இடம்பெற்றுள்ளன. குழுக்களாக அணிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுடைய குழுக்களில் முதலிடத்தை பெறும் அணிகள் நேரடியாக 2020ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெறும் என்பதுடன், ஒவ்வொரு குழுக்களிலும் மிகச்சிறந்த முறையில் 2வது இடத்தை பிடிக்கும் முதல் நான்கு அணிகளும் நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்கும்.

முக்கியமாக போட்டியை நடத்தும் அணி, குழுநிலையில் முதலிடத்தையோ அல்லது, குழுநிலையில் அதிசிறந்த இரண்டாவது இடத்தை பெறும் நான்கு அணிகளிலோ இடம்பெறுமாயின், மிகச்சிறந்த இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் ஐந்தாவது அணிக்கு 2020ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி தொடக்கம் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை