பாகிஸ்தான் ஹோட்டல் மீது பிரிவினைவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பல பில்லியன் டொலர்கள் மதிப்பு மிக்க திட்டத்தின் மைய பகுதியாக திகழும் க்வாடர் துறைமுக நகரத்திலுள்ள சாவேர் பேர்ல்–கான்டினென்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

ரமலான் மாதம் என்பதால் ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லையென்றும், குறைந்தளவிலான ஹோட்டல் பணியாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனர்கள் மற்றும் மற்ற முதலீட்டாளர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக பிரிவினைவாத அமைப்பான ‘பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி’ தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தான் மாநிலத்தில் கூடுதல் அதிகாரத்தைப் பெற அந்த அமைப்பு முயன்று வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த அமைப்புடன் தொடர்புள்ளதாக கூறிக்கொள்ளும் ட்விட்டர் கணக்கு ஒன்றின் அண்மைய பதிவில், “சீனா மற்றும் பாகிஸ்தான் மீது மேலதிக தாக்குதலை எதிர்பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகளால் உள்ளுர் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு பலனேதுமில்லை என்று அங்குள்ள ஆயுததாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அரேபியக் கடலில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரமாக குவாடார் திகழ்கிறது. 60 பில்லியன் டொலர் செலவில் சீன மற்றும் பாகிஸ்தான் பொருளாதார வலயமாக அது மேம்படுத்தப்படுகிறது.

அந்த மாநிலம் ஈட்டும் இலாபம் அங்குள்ள மக்களுடன் முறையாகப் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என அந்தக் கிளர்ச்சிப் படை குறைகூறிவருகிறது.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை