திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெண்றாசன்புர பகுதியில் மலசலகூட குழிக்குள்ளிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் கொஸ்வத்தே கெதர சமிந்த சமன் சமரசிங்க எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கல்கிரியாகம பொலிஸ் பிரிவிலுள்ள கிரணகம பகுதியிலிருந்து கணவன், மனைவி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கந்தளாய் பகுதிக்கு வந்துள்ளனர்.
இதன்போது, மனைவி தனது உறவினர் ஒருவர் இங்கு உள்ளதாகவும் அவரது வீட்டுக்குச் செல்வோம் எனவும் தெரிவித்து தனது கணவரை வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மனைவி இதன்போது தனது கள்ளக்காதலனின் வீட்டுக்கே மனைவி கணவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும், கணவன் உறங்கிக் கொண்டிருந்த போது அவரை தாக்கி கொலை செய்து மலசல கூட குழிக்குள் போட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியிலிருந்து வந்த துர்நாற்றம் காரணமாக பிரதேசத்திலுள்ளோருக்கு எழுந்த சந்தேகத்தை அடுத்து, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் நேற்று (20) மாலை பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உயிரிழந்தவரின் மனைவியான கல்கிறியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரணகம, தபுலு ஹம்மில்லாவெவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய வேரகம முதியன்சலாகே பண்டார மெனிக்கே மற்றும் அவரது கள்ளக்காதலனான, கந்தளாய், வெண்றாசன்புர யுனிட் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நுகலியத்தே கெதர சுசந்த பிரேமலால் எனவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைய தினம் (21) குறித்த சடலம் மரண விசாரணைக்கு உட்படுத்ததையடுத்து, தற்பொழுது சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
from tkn