நாடு முழுவதும் சித்திரை மாத உறுதிமொழி

நாட்டைப் போதையிலிருந்து விடுதலை பெறச் செய்யும் எண்ணக்கருவிலான சித்திரை மாத உறுதிமொழி வழங்கும் நிகழ்வு நேற்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இதனைவிட நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகள், அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களிலும் போதைக்கு எதிரான உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். நேற்றுக்காலை 8 மணிக்கு நடைபெற்ற “சித்திரை மாத உறுதிமொழி” பிரதான நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டினை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக தான் போதைப்பொருள் பாவனையை தவிர்த்துக்கொள்வேன் என்றும் ஏற்கனவே அதற்கு பலியாகியுள்ள மற்றும் பலியாகாத தனது உறவினர்களையும், நண்பர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் போதையிலிருந்து மீட்டுக்கொள்வதற்காக இத்தால் தன்னிடம் ஒப்படைக்கப்படும் மகத்தான கூட்டுப்பொறுப்பை உயர்ந்தபட்ச அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் நிறைவேற்றுவேன் என்றும் அனைவரும் திடசங்கற்பம்பூண்டு சத்தியப்பிரமாணம் செய்தனர்.

 இந்த நிகழ்வு இலத்திரனியல் ஊடகங்களின் வாயிலாக நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டதோடு, அதனுடன் இணைந்ததாக தத்தமது நிறுவனங்களிலிருந்து அரச சேவையாளர்கள், பொதுமக்கள், பாடசாலை பிள்ளைகள் ஆகிய அனைவரும் இந்த சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொண்டனர்.

போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக குடும்ப கட்டமைப்பிலிருந்து சமூக கட்டமைப்பு வரை விரிவானதொரு கருத்து மாற்றத்துடனும் நேரடி பங்களிப்புடனும் இந்த பேரழிவை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதி இத்திட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

நேற்றைய நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் வெகு ஆர்வமாகப் பங்குபற்றியிருந்தமையையும் காணக்கூடியதாகவிருந்தது.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை