வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளுக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்

கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.ஆளுநர் மூலமாக ஆளுகைகளைக் கையாள்வது ஜனநாயகச் செயற்பாடு அல்ல.சிறுபான்மைக் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை உடன் நடாத்தக் கோரும் அழுத்தத்தைக் கொடுத்து உடன்பாட்டை எட்டிய பின்னர் அரசுக்கு ஆதரவளித்து வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றலாம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று(02) விடுத்துள்ள தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்பது தொடர்பாகச் சிறுபான்மை கட்சிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்ற சிறுபான்மைக் கட்சிகளும் பிரதான எதிர்கட்சி ஜே.வி.பி உட்பட முக்கிய அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி இவ்விடயத்தில் அதிக கரிசனை காட்டியபோதும் இவ்விடயம் காலதாமத்தை எதிர் கொண்டு வருகிறது.

சட்டத்திருத்தப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலம் பிரதமர் நினைத்தால் ஒரேநாளில் இதற்கான தீர்வைப்பெற முடியும்.

தேர்தல் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்யவேண்டும் என்ற போர்வைக்குள் இரவோடு இரவாக சிறுபான்மையினரைப் பாதிக்கும் சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டுவந்த அரசுக்கு இதை செய்வதில் தயக்கம் ஏற்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை தோற்றுவிக்கின்றது.

தற்போது அரசு தனது பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்கு கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் நிலையில் தமது ஆதரவை வழங்க முன்வரும் சிறுபான்மைக் கட்சிகள் மாகாணசபை தேர்தலை உடன் நடத்துவது தொடர்பில் அரசுடன் உடன்பாடு ஒன்றை செய்து கொண்டு பட்ஜெட் நிறைவேற ஆதரவு அளிப்பதே சிறந்ததாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க, அதிகாரங்களைப் பகிர்ந்து, தேர்தல் முறைமையை ஜனநாயக முறையில் மாற்றியமைக்க வேண்டும். அதேபோல் மாகாண சபைத் தேர்தல்களை வெகுவிரைவில் நடத்தவேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த விடயங்களில் உள்ள தடைகளை தகர்க்க முன் வரவேண்டும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஆளுநர் மூலமாக ஆளுகைகளைக் கையாள்வது ஜனநாயகச் செயற்பாடு அல்ல.மாகாணசபை உறுப்பினர்களின் மூலமாகவே அதனைக் கையாளமுடியும்.மக்களுக்கான சேவையை மாகாண சபைகளின் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் மூலமாகவே கையாள முடியும்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்– வ.சக்திவேல்)

Tue, 04/02/2019 - 15:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை