வாகனத்தை மோதவிட்ட இரு பலஸ்தீனர் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வாகனத்தை மோதவிட்டு இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் மற்றும் எல்லை காவல் பொலிஸார் ஒருவர் மீது காயம் ஏற்படுத்தியதாக இரு பலஸ்தீனர்கள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பலஸ்தீன தாக்குதல்தாரிகள் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சூடு நடத்தி இருவரை செயலிழக்கச் செய்ததாகவும் மூன்றாமவர் சிறு காயத்திற்கு உள்ளானதாகவும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பலஸ்தீன நகரான ரமல்லாஹ்வில் இருந்து வடமேற்காக 10 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு படை வீரருக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதோடு மற்றையவர் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

எந்த ஒரு போராட்டக் குழுவுடனும் தொடர்பற்ற தனிப்பட்ட பலஸ்தீனர்கள் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இவ்வாறான வாகனத்தை மோதவிட்டு நடத்தும் தாக்குதல்களை பரவலாக மேற்கொண்டனர். எனினும் அண்மைக் காலத்தில் இந்த சம்பவங்கள் குறைந்துள்ளன.

2015 தொடக்கம் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் வாகனத்தை மோதவிட்டு நடத்திய தாக்குதல்களில் பலஸ்தீனர்களால் 50க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இதே காலப்பிரிவில் இஸ்ரேலிய படையினரால் 260க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை