அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மட்டும் நோக்காகக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் வேதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் அமைக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் உத்தேச திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே வேலுகுமார் எம்.பி. இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
‘’ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து இதற்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைத்தன. தமிழ் முற்போக்கு கூட்டணியும் அதில் பங்காளிக்கட்சியாக அங்கம் வகித்தது. மாறுபட்ட கொள்கைகளைக் கடைபிடிக்கும் இரண்டு பிரதானக் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்ததால் அதன் ஆயுட்காலம் உரிய வகையில் நீடிக்கவில்லை. சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே ஆட்சியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
19 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப் பட்டதை மட்டுமே பாரிய வெற்றியாக கருதலாம். மற்றும்படி எந்த நோக்கத்துக்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி அது நகரவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். தேசிய அரசாங்கம் தொடர்பில் நாம் சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம். எனவே, மீண்டும் அவ்வாறானதொரு கட்டத்துக்கு செல்வதாக இருந்தால் அகம், புறம் என அனைத்து விடயங்களையும் அலசி ஆராய்ந்து விட்டே முடிவொன்றை எடுக்கவேண்டும்.
from tkn