உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென சுகாதார போசாக்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசப்பற்றாளர்கள் அதிகரித்துள்ளதால் இந்த ஆணைக்குழுவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், விஜயகுமாரதுங்கவை கொலை செய்த கட்சி, இப்போது திரைப்படம் தயாரித்து மக்கள் மத்தியில் காலூன்ற முயல்வதாகவும் தெரிவித்தார்.
விஜயகுமாரதுங்கவின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,பல தலைவர்களுடன் நான் அரசியல் செய்தாலும் விஜயகுமாரதுங்கவை என்னால் மறக்க முடியாது. அவர் அன்று கூறியவை தற்காலத்திற்கும் பொருந்துகின்றது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே நான் அவருடன் அரசியல் செய்தேன். அரசியல்வாதிகளே நாட்டில் தேசிய பிரச்சினைகளை உருவாக்கினர்.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபின்னர் சுதந்திரத்தை பகிர்ந்துகொள்ளவதில், தலைவர்கள் மோதிக் கொண்டனர்.அது பின்னர் இனவாதமாக மாறியது. பின்னர் வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் விஜயகுமாரதுங்கவே இந்த அரசியல் சமூகத்தை மாற்றி, மூன்றாவது சக்தியொன்றை உருவாக்கினார். ரோஹன விஜேவீரவுடன் விஜயகுமாரதுங்க இணைந்திருக்கலாம்.ஆனால் விஜயவை கண்டு ரோஹன பயந்ததாலே, அந்தக் கட்சி விஜயவை கொலை செய்தது.
ஜே.ஆருடனும் அவர் நெருக்கமாக பழகிவந்தார். மகாசங்கத்தினரை அழைத்துக் கொண்டு விஜயகுமாரதுங்க வடக்கிற்குச் செல்ல முயன்றபோது அநுராதபுரத்தில் தடுக்கப்பட்டார். அவர் ஜனாதிபதியுடன் இது தொடர்பாக தொலைபேசியில் பேசினார். பிக்குமாரை வடக்கிற்கு அழைத்துச் செல்வதால் பிரச்சினை வரும்என ஜனாபதி கூறியிருந்தார். பிக்குமாரை இனவாதிகளாக சித்தரித்திருக்கும் நிலையில் அவர்கள் மனித நேயம் மிக்கவர்கள் என்பதை காண்பிக்க இந்த பயணம் அவசியம் என விஜயகுமாரதுங்க விளக்கிய பின்னர் அவருக்கு யாழ்ப்பாணம் செல்ல அனுமதி கிடைத்தது.
யுத்தத்தை யுத்தத்தினால் தோற்கடிக்க முடியும். ஆனால் அதன் பின்னரான குரோதத்தை தீர்க்க நீண்ட காலம் பிடிக்கும் என்றும் விஜய அன்று கூறியிருந்தார்.
from tkn