கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது

துபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட் நௌபர் மொஹமட் அலி  (வயது 50)  ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  கொலன்னாவையில்  நேற்று (22) இரவு 11.10 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவ, சாலமுல்ல வீதியில் வசித்துவரும் 50 வயதான இச்சந்தேக நபர்,  சாலமுல்ல பிரதேசத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரைக் கைதுசெய்யும்போது அவரிடம் 10.48 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சந்தேக நபர், கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி துபாயில், மாக்கந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேக நபர்களுடன் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் பிரதான உதவியாளர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேக நபரை இன்றையதினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவரிடம்  திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sat, 02/23/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை