ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் மே மாதம் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸடீன் முன்னிலையில் நடைபெற்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவச் சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த கொலை வழக்கு தொடர்பாகக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை வாக்குமூல விசாரணை கடந்த 09.01.2019ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று குற்ற வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  

நேற்றுமுன்தினம் முதலாம் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம், பதினாறாம் சாட்சியங்கள் மேல் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

இதனடிப்படையில் 16ஆவது சாட்சியான முன்னாள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.அப்துல்லா மன்றில் ஆஜராகி விளக்கமளித்தார். ஏனைய சாட்சியங்களின் விளக்கங்களை பெறுவதற்காக எதிர்வரும் மே மாதம் 02ஆம் மற்றும் 03ஆம் திகதிகளுக்கு வழக்கினை ஒத்திவைப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸடீன் அறிவித்தார்.   

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Sat, 02/23/2019 - 10:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை