சுப்பர்மேன் குசல் பெரேராவின் திகைப்பூட்டும் சாதனைகள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி இலங்கை அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற அதிரடி ஆட்டக்காரரான குசல் ஜனித் பெரேரா,டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

தனி ஒரு வீரராக ஆர்ப்பரிப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா டெஸ்ட் அரங்கில் தனது 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் பெற்றுக்கொண்ட சதமாகவும் பதிவாகியது.

அவருக்குத் துணையாகவிளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இறுதிவரை ஆட்டமிழக்காமல்,27பந்துகளுக்கு முகங்கொடுத்து வெறுமனே 6ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அத்துடன்,கிரிக்கெட் அரங்கில் தனது சிறந்த பந்து வீச்சுப் பிரதியாக 133ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். 

இந்தப் போட்டியில் 52ஓட்டங்களுக்கு 3விக்கெட்டுக்களை இழந்த போது துடுப்பாடுவதற்கு களமிறங்கிய குசல் பெரேரா,சுமார் 5மணித்தியாலங்களுக்கு மேலாக ஆடுகளத்தில் இருந்து 5சிக்ஸ்ர்கள் மற்றும் 12பவுண்டரிகளைக் குவித்து தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியின் தொடர் டெஸ்ட் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  

தென்னாபிரிக்காவுக்கு எதிராக சதம் கடந்து ஆட்டமிழக்காது 153ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம் குசல் ஜனித் பெரேரா குறித்த முக்கியமான சுவாரஸ்யமான விடயங்களை இங்கு பாரக்கலாம். 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1999ஆம் ஆண்டு தன் சொந்த மண்ணில் பிரையன் லாரா ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 153ஒட்டங்களினால் 300ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி அபாரமான டெஸ்ட் வெற்றியை மேற்கிந்தியதீவுகளுக்கு பெற்றுத் தந்ததைப் போல் சுமார் 20வருடங்களுக்குப் பிறகு தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காது 153ஓட்டங்களைப் பெற்று 304ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை பரபரப்பான டெஸ்ட் போட்டியில் விரட்டி வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றியை குசல் ஜனித் பெரேரா இலங்கை அணிக்கு தேடித்தந்தார்.  

அன்று லாரா செய்தது தன் சொந்த மண்ணில்,ஆனால் இன்று குசல் பெரேரா செய்தது அன்னிய மண்ணில்,ஆக்ரோஷமும்,வீரியமும் நிறைந்த தென்னாபிரிக்க பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் மண்ணில் பெற்றுக் கொண்ட சாதனை வெற்றி இதுவாகும்.  

1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா,கார்ட்னிவோல்ஸூடன் கூட்டணி அமைத்து டெஸ்ட் அரங்கில் மிகப் பெரிய வெற்றி யொன்றைப் பெற்றாலும்,தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் குசல் பெரேரா இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுக்காக விஷ்வ பெர்னாந்துவுடன் இணைந்து பகிர்ந்த இணைப்பாட்டம் (78) டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்ஸில் 10ஆவது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் குவித்த ஜோடி என்ற சாதனையாக இடம்பிடித்தது. இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் மற்றும் முஸ்தாக் அஹமட் ஜோடி 57ஓட்டங்கள் (அவுஸ்திரேலியாவுக்கு எதிராக– 1994) எடுத்திருந்தனர். 

ஒரு விக்கெட் வெற்றி 

இலங்கை அணி டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் வித்தியாசத்தில் 2ஆவது முறையாக வெற்றிபெற்றது. ஏற்கனவே 2006இல் கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே தென்னாபிரிக்க அணியை ஒருவிக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இப்போட்டியில் மஹேல ஜயவர்தன சதமடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  அத்துடன்,டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அணியொன்று ஒருவிக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற 13ஆவது சந்தர்ப்பமாகவும் இது இடம்பிடித்தது.

இறுதியாக இந்திய அணி 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஒருவிக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

300ஓட்டங்கள் 

இலங்கை அணி டெஸ்ட் அரங்கில் 300ஓட்டங்கள் என்ற இலக்கினை 4ஆவது தடவையாக துரத்தி அடித்துள்ளது. இதற்கு முன் சிம்பாப்வே அணிக் கெதிராக (391ஓட்டங்கள்) 2017ஆம் ஆண்டும்,தென்னாபிரிக்காவுக்கு எதிராக (352ஓட்டங்கள்) 2006ஆம் ஆண்டும் வெற்றி பெற்றிருந்தது. 

முதல் அணி 

தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியில் 4ஆவது இன்னிங்ஸில் 300ஓட்டங்களுக்கு அதிகமாக துரத்தியடித்து வெற்றி பெற்றமுதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இலங்கை பெற்றுக்கொண்டது. இதற்குமுன் 1991ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி 191ஓட்டங்களை அவ்வணிக்கு எதிராக துரத்தியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதிக ஓட்டங்கள் 

டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி சார்பாக 2ஆவது இன்னிங்ஸுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த 2ஆவது வீரராக குசல் ஜனித் பெரேரா வரலாற்றில் இடம்பிடித்தார். 

இதில் குமார் சங்கக்கார 192ஓட்டங்களுடனும் (2007 –அவுஸ்திரேலியாவுக்கு எதிராக) முதலிடத்திலும்,அரவிந்த டி சில்வா 143ஓட்டங்களுடன் (1998 –சிம்பாப்வேஅணிக்குஎதிராக) 3ஆவது இடத்திலும் உள்ளனர். 

வெளிநாட்டு மண்ணில் 4ஆவது இன்னிங்ஸுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த 2ஆவது வீரராகவும் மாறினார். இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் யூனிஸ் கான் இலங்கை அணிக் கெதிராக ஆட்டமிழக்காது 171ஓட்டங்களையும் (பல்லேகலை மைதானம் - 2015),அதே போட்டியில் மற்று மொரு பாகிஸ்தான் வீரரான மசூத் 125ஓட்டங்களையும் குவித்திருந்தனர். 

வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற இலங்கை முதல் முறையாக தென் ஆப்பிரிக்கத் தொடரில் 1--0என்று முன்னிலை பெற்றுள்ளது.இதன்படி, இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி போர்ட் எலிசபத்தில் நடைபெறவுள்ளது. 

தென்னாபிரிக்காவுக்கு தொடரை வெல்லவாய்ப்பில்லை. போட்டியை சமநிலை செய்யவேண்டும். மறுபுறத்தில் இலங்கை அணிக்கு முதற்தடவையாக தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.   

(பீ.எப் மொஹமட்) 

Tue, 02/19/2019 - 16:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை