சகல இன மாணவர்களும் ஒன்றாகப் பயிலும் முன்மாதிரிப் பாடசாலை​கள்

சகல சமயத்தினர்களும் கல்வி கற்கும் முன்மாதிரிப் பாடசாலைகளை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

பாணந்துறை, அம்பலாந்துவையில் இடம்பெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின்  பிரச்சினைகளை ஆராயும் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை  தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர்: "முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெறும் இந்த அரசாங்கம், முஸ்லிம்களுக்கு உரிய இடத்தை வழங்குவதில்லை.

சகல சமயத்தவர்களும் கல்வி பயிலும் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.  திட்டமிட்ட முஸ்லிம் பாடசாலையை அமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாம் மேல் மாகாணத்தில் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்க உள்ளோம். இதில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து  கல்வி கற்பர். இதனால் புரிந்துணர்வு, இன ஐக்கியம் ஏற்படும்.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் தீவிர அரசியலுக்குள் வர வேண்டும். இவ்வளவு பெறுமதியான அவரை ஐ.தே.க. ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் அவரும் ஒதுங்கியுள்ளார். எனது கட்சியை நான் அவருக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளேன்.

நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளைத் திறக்க வேண்டுமென்று நான் கூறியதும், என்னை தாக்க ஆரம்பித்தனர்.

(மொறட்டுவை  மத்திய  விசேட  நிருபர்)

 
Sat, 02/23/2019 - 08:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை