தேயிலைத் துறை சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய குழு

தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தேயிலைத் துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிந்துஅவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.  

தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.  

ஜனாதிபதி ஆளணி பிரதானி எச்.எம்.பீ.ஹிட்டிசேகர, பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, திறைசேரி செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை தேயிலை சபையின்

தலைவர் டபிள்யு.எல்.பி.விஜேவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஜே.விமலவீர, சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோரும் இலங்கை பெருந்தோட்ட சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தரகர்கள் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றை சார்ந்த ஒரு பிரதிநிதி வீதம் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

தேயிலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், அதன் அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகளை செயற்படுத்துதல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் குறித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.  

தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் காணப்படும் தடைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதியில் தோன்றியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.  

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பிரபல கிரிக்கற் வீரரான முத்தையா முரளிதரன், தேயிலை துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

Thu, 02/14/2019 - 09:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை