தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று (28) முற்பகல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டவர் வழங்கிய தகவலுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் மற்றும் அவரது மனைவி சஷி வீரவங்ச ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு CID யினர் அனுமதியை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றவியல் விசாரணை திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தோடு, இறுதியாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, இருவருக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
from tkn