அரசின் ஆட்சி அதிகாரத்தை தொடர வன்னி மக்கள் தாக்கத்தைச் செலுத்தினர்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதிலும் , தொடரச் செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்றுமுன்தினம் (24) வழங்கப்பட்ட வரவேற்பு விழாவின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாட்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான போராட்ட நாட்களாகவுமே இருந்தன.இந்தப் போராட்டத்திலே வன்னி மாவட்டத்தில் பிரசவித்த எமது கட்சியானது களத்தில் நின்று ஜனநாயகத்தை உயிரூட்டுவதற்கும் அரசியலமைப்பில் விழுந்த ஓட்டையை ஒட்டுவதற்கும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டது. எங்களுக்கு அரசியல் அதிகாரம் தந்த வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்குமே இந்த பெருமையும் கெளரவமும் கிடைக்கின்றது.

இந்த இருண்ட நாட்களிலே நமது அரசியல் முடிவடைந்து விட்டது என பலர் பகற்கனவு கண்டனர். அமைச்சு அதிகாரத்தை பிடுங்கி எடுத்ததனால் நாம் அவர்களுக்கு அடிபணிவோம் என சிலர் தப்புக்கணக்குப்போட்டனர், அச்சுறுத்திப்பார்த்தனர். வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கினர். நாம் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை நிறுத்தி அதற்கு பதிலாக புதிய வேலைத்திட்டங்களை புகுத்தி, அடிக்கல்லை கூட நாட்டினர். அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்து எப்படியாவது தமது அணியில் எமது கட்சியை ஈர்த்துக்கொள்ள வேண்டுமென துடியாய் துடித்தனர். பணத்தையும் பதவியையும் தந்து, தாம் ஏற்படுத்திய ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதிலே பாடாய்ப்பட்டனர். எனினும் நானும் எனது கட்சி எம்.பிக்களும் இதற்கெல்லாம் விலை போகவில்லை.மசியவும் இல்லை. இவற்றுக்கெல்லாம் நாம் சோரம் போயிருந்தால் இன்று நம் நாட்டின் அரசியல் அமைப்பு கேலிக் கூத்தாகியிருக்கும் ஜனநாயகம் செத்துமடிந்து எதேச்சதிகாரம் கோலோச்சியிருக்கும்.

வன்னி மாவட்டத்திலே ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியானது இன்று இறைவனின் உதவியினால் வியாபித்து ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் நமது தேவைகளை பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாகவும் இன்று மாறியிருக்கின்றது.

துன்பங்களையும் துயரங்களையும் ஏற்று பல தசாப்தங்களாக போராடி வந்த வன்னி மாவட்ட மக்களுக்கு தற்போது ஓரளவு நிம்மதி கிடைத்த போதும் அவர்களின் வாழ்க்கையிலே இன்னும் விடிவில்லை.பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் பிரதமரிடம் சில பொறுப்புகள் இருப்பதால் நாமும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளும் இணைந்து வீடில்லா பிரச்சினை உட்பட பல அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்தவருட இறுதிக்குள் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றோம் என்றார்.

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை