அருட்தந்தை மில்லர் மட்டக்களப்பில் காலமானார்

பிரஜைகள் சமாதானத்துக்கான விருது பெற்றவரும் சிறந்த சமூக, சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை பென்ஜமின் ஹென்ரி மில்லர் புதுவருட தினமான ​நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அருட்தந்தை மில்லர் நேற்று அதிகாலை இறையடி சேரந்ததாகவும், இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும் என்றும் புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவரான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர் 1948ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்து கடந்த 70 வருடங்களாக மட்டக்களப்பில் மனிதாபிமான, சமூகப்பணி மற்றும் கல்விப்பணிகளை ஆற்றிவந்தார்.இலங்கைக்கு வந்த அருட்தந்தை ஹரி மில்லர் ஆங்கில மொழிமூலம் புனித மிக்கேல் கல்லூரியில் வரலாறும் பௌதிகமும் கற்பிப்பதில் தனது பணியை ஆரம்பித்தார்.

சமாதான சகவாழ்வு வேலைத் திட்டத்துக்குப் பாரிய பங்களிப்புச் செய்த அருட்தந்தை பென்சமின் ஹென்ரி மில்லர், மட்டக்களப்பில் 1980 களில் றொட்டறிக் கழகம், சமாதானக் குழு, பல்சமய ஒன்றியம், மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றை நிறுவுவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர், 1990 யுத்த காலத்தில் பாதுகாப்புப் படைகளிடமிருந்து பொது மக்களை மீட்பதற்குப் படைகளுக்கு மிகவும் உதவியாக இருந்ததோடு, காணாமல் போனவர்களின் விபரங்களைப் பகிரங்கமாகவும் வெளிப்படுத் தியிருந்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் பற்றி வெளிநாட்டு இராஜ தந்திரிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவதற்காக யுத்தகால அவலங்களை அருட்தந்தை வெளிப்படுத்தியிருந்தார்.

2002,- 2004 இல் நோர்வேஜிய அரசு செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்த கண்காணிப்புக் குழுவிற்கும் அருட்தந்தை மில்லரை அரசு நியமித்தது. மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் வளர்ச்சிக்காக அதன் பொறுப்பாளராகவும் மற்றும் ஆசிரியராகவும் கடமையாற்றியதுடன், அதிபராக 15 வருடங்கள் இவர் கடமையாற்றியுள்ளார்.

மட்டக்களப்பில் சர்வமத அமைப்பு மற்றும் சமாதான பேரவை உட்பட பல்வேறு சமூக சிவில் அமைப்புக்கள் என்பவற்றில் முக்கியஸ்தராக இருந்து, யுத்த காலத்தில் சிறந்த மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 01/02/2019 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை