இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் இன்றையதினம் (10) ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு கட்டங்களில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை (07) நான்கு மீனவர்களும் ஒரு படகும் மறுநாள் செவ்வாய்க்கிழமை (09) நான்கு மீனவர்களும் ஒரு படகும் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன் முன்னிலையில் ஆஐர்ப்படுத்தியிருந்தனர்.
குறித்த மீனவர்களுக்கு எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குறித்த வழக்கு இன்றையதினம் (10) ஊர்காவற்துறை நீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது . இவ்வழக்கை விசாரித்த நீதவான் ஏ. யூட்சன், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டால், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறை தண்டணை வழங்கப்படும் எனும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
(பருத்தித்துறை விசேட நிருபர் - என். வினோத், புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
from tkn