கோத்தாவுக்கு எதிரான வழக்கு 11 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

A Mohamed Fais

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜானகி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளபட்டபோதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

​டி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை அமைப்பதற்கு ரூபா 33 மில்லியன் அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது குறித்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் அலி சப்ரி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்குமாறும் குறித்த ஆவணங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணை செய்ய குறித்த வழக்கை 11 ஆம் திகதி ஒத்திவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்றைய வழக்கிற்கு கோத்தாபய ராஜபக்ஷ சமூகமளித்திருக்கவில்லை என்பதோடு, அவர் கடந்த வழக்கின் போது நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் வெளிநாடு சென்றுள்ள நிலையில் வழக்கின் ஏனைய 06 பிரதிவாதிகளும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/03/2019 - 13:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை