மிட்செல் மார்ஷிற்கு எதிராக ஆஸி.ரசிகர்கள் கோஷம்

இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தியும், மிட்செல் மார்ஷ்-க்கு எதிராகவும் அவுஸ்திரேலிய ரசிகர்கள் கோசமிட்டது ஏமாற்றம் அளிப்பதாக டிரவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் தொடங்கியது. ‘பொக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் கிறிஸ்மஸூக்கு அடுத்த நாள் தொடங்கிய இந்த போட்டியை பார்ப்பதற்காக சுமார் 73 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் மைதானத்தில் குவிந்தனர்.

மெல்போர்ன் மைதானம் விக்டோரியாவில் இருக்கிறது. இந்த போட்டிக்கான அவுஸ்திரேலியா அணியில் முதல் இரண்டு போட்டியில் இடம்பிடித்திருந்த விக்டோரியாவின் ஹெண்ட்ஸ்காம்பிற்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் இடம்பிடித்தார். இந்த மாற்றம் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் விக்டோரியாவைச் சேர்ந்த ரசிகர்கள் இந்திய துடுப்பாட்டவீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கோசம் எழுப்பினார்கள். மேலும், மிட்செல் மார்ஷ் பந்து வீச வரும்போது அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். ரசிகர்களின் இந்த செயலை அவுஸ்திரேலிய வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கோசம் எழுப்புவது ஏமாற்றம் அளிக்கிறது என்று மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் டிரவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரவிஸ் ஹெட் கூறுகையில் ‘‘இது சிறந்தது என்று நான் நினைக்கவில்லை. உண்மையிலேயே விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் உற்சாகத்தில் கோசமிட்டதை நாங்கள் பார்த்தோம். ஆனால் மிட்செல் மார்ஷ் பந்து வீச வரும்போது, அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்தில் இந்தியாவிற்கு மிட்செல் மார்ஷ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவுஸ்திரேலியாவிலேயே எதிர்ப்பு கோசத்திற்கு உள்ளாவது சரியானது என்று நான் நினைக்கவில்லை. இது மோசமான செயல். அதோடு ஏமாற்றமும் அளிக்கிறது.

விக்கோட்ரியா ரசிகர்களுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் இல்லாதது ஏமாற்றம் அளிக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மிட்செல் மார்ஷ்க்கு எதிராக அவர்கள் திரும்புவது மோசமானது’’ என்றார்.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை