84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு

ஒரே நிறுவனத்தில் அதிக காலம் பணி செய்தவர் என்ற சாதனையை பிரேசில் நாட்டின் விற்பனை பிரிவு மேலாளரும் 100 வயது முதியவருமான வால்டர் ஓர்த்மேன் படைத்திருப்பதாக கின்னஸ் அறிவித்துள்ளது.

84 ஆண்டுகளாக அவர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாம் உலக போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு, ரெனாக்ஸ் எஸ்.ஏ என்ற நிறுவனத்தில் கப்பல் உதவியாளராக அவர் பணியாற்ற தொடங்கினார். அப்போது, அவருக்கு 15ஆவது வயது. பின்னர், விற்பனை பிரிவில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதே துறையில்தான் அவர் கடைசிவரை பணியாற்றிவந்துள்ளார்.

2020 வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்க பணியாளர் சராசரியாக ஒரு நிறுவனத்தில் 4.1 ஆண்டுகள்தான் பணியாற்றுவதாக அமெரிக்க தொழிலாளர்கள் புள்ளியியல் முகாமை தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு விதிவிலக்காக வால்டர் ஓர்த்மேன் பணியாற்றியுள்ளார். அதன் இரகசியம் என்ன என்பதை அவரே விளக்கியுள்ளார். “நான் அதிகம் திட்டமிடுவதும் இல்லை, நாளை பற்றி அதிகம் கவலைப்படுவதும் இல்லை. நாளை எழுந்து, உடற்பயிற்சி செய்து, வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன்.

கடந்த காலம், எதிர்காலம் பற்றி நினைக்காமல் நீங்கள் நிகழ்காலத்தில் பிஸியாக இருக்க வேண்டும்” என்றார்.

 

Sat, 05/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை