- பிரதமரின் உயிர்த்த ஞாயிறு தின செய்தி
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த வெற்றியின் மகிழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு பண்டிகை. இது தியாக வாழ்வின் பெறுமதியை வலியுறுத்தும் பண்டிகையாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உயிர்த்த ஞாயிறு தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான உயிர்த்த ஞாயிறு பண்டிகையை இன்று உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு பண்டிகைக்கு முன்பதாக கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தை அனுஷ்டித்தனர். அன்றைய தினத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் அனுஷ்டித்தனர்.
அதேபோன்று தியாக வாழ்வின் பெறுமதியைப் போன்றே துணிவு மற்றும் பலத்தை வாழ்க்கையில் இணைத்துக்கொண்டு சிறந்த வாழ்க்கை பற்றி தியானிப்பதற்கு இன்றைய நாள் அனைவருக்கும் முக்கியமானதாகும்.
கிறிஸ்தவ மக்கள் விபூதிப் புதன் தொடங்கி நாற்பது நாட்கள் பல்வேறு ஒறுத்தல்களை மேற்கொண்டு செப, தப உபவாச மற்றும் புண்ணிய காரியங்களை செய்வதில் இந்த நாட்களை அனுசரிக்கின்றனர்.
அதேபோன்று சமூகத்தை அந்தகாரத்துக்குள்ளாக்கும் மோசமான சக்திகளிலிருந்து மீட்பதற்கு உயிர்த்த ஞாயிறு ஒளி மக்களுக்கு வழிகாட்டுகிறது.
சமூகத்துக்கான நீதி, மனிதத்தன்மை மற்றும் அன்புக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து உலகுக்கு வழங்கியுள்ள முன்மாதிரியான வாழ்க்கை மாற்றத்தை அனுபவமாகக் கொண்டு சகவாழ்வு மற்றும் அன்னியோன்ய அன்புடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு கிறிஸ்தவ மக்களுக்காக தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் தமது உயிர்த்த ஞாயிறு தின பண்டிகை வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
from tkn