2022 பெப்ரவரி 26 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பின் மாநாடொன்றில் பிரதி உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே ஜேக்கப் உரையாற்றியதுடன், பொருளாதாரம், நிதி, அபிவிருத்தி பங்குடைமை, ஆளுமை விருத்தி மற்றும் இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள் ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களின்கீழான ஒத்துழைப்பின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவு காணப்படுவதனை அவர் வலியுறுத்திக்கூறினார்.
2020 ஆம் ஆண்டில் இலங்கையின் இரண்டாவது வர்த்தகப் பங்காளியாக இந்தியா காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டில் மேலதிக வளர்ச்சி காணப்பட்டதுடன் இந்த வர்த்தக பங்குடைமையானது 5.23 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியிருந்தது. கடந்த 15 வருடங்களில் இலங்கையில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடானது 1.7 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியை கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா திகழ்கின்றது. “பொருளாதார விடயங்களில் காணப்படும் பரஸ்பர புரிந்துணர்வின் மேம்பாடு மற்றும் நிறைவான விடயங்களை வலுவாக்கல் ஆகியவற்றின் மூலம் அந்த பங்குடமையை மேலும் அபிவிருத்தி செய்வதில் இந்தியாவும் இலங்கையும் முயன்றுவருகின்றன”, என அவர் குறிப்பிட்டார்.
400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம், ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியால் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படவேண்டிய 515 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை ஒத்திவைப்பு, இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி தேவைகளுக்காக கடன் உதவி அடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு ஆகியவை குறித்தும் பிரதி உயர் ஸ்தானிகர் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டினார். இதற்கு மேலதிகமாக உணவு, மருந்து பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை இந்தியாவிலிருந்து இலங்கை இறக்குமதி செய்வதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி தொடர்பாகவும் தற்போது பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருதரப்பு உறவை வலுவூட்டும் மிகவும் முக்கியமான விடயமான இருநாட்டு மக்கள் இடையிலான உறவுகள் தொடர்பாக வலியுறுத்தியிருந்த பிரதி உயர் ஸ்தானிகர், இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பங்குடைமை மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான பாரிய தளமாக கடந்த பல வருடங்களாக இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் 1.94 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் அதில் 56,268 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதுடன் மொத்த சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 29 வீதமாக அது பதிவாகியிருந்தது’, என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பு திட்டங்களில் அடிப்படையில் சுகாதாரத்துறை மிகவும் முக்கியமான ஓர் அம்சமாக காணப்படும் நிலையில் வக்சின் மைத்திரி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொவிசீல்ட் விநியோகம், மருத்துப் பொருட்கள் விநியோகம், மருத்துவ ஒட்சிசன் வழங்கல், 26 தொன்கள் மருந்து பொருட்கள் விநியோகம் மற்றும் ஒரு லட்சம் ரபிட் அன்டிஜன் சோதனை தொகுதிகள் அன்பளிப்பு ஆகியவையும் உள்ளடங்குவதாக பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்திருந்தார். அதேபோல பாதுகாப்பு துறை சார்ந்த விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருந்த அவர், எம்டி. நியூ டைமண்ட் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்களின் அனர்த்தங்கள் முறையே 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த நிலையில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர காவல் படை ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட வகிபாகம் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் இந்த வகிபாகமானது இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை எடுத்தியம்பும் மற்றொரு அம்சமாக காணப்படுகிறது.
பிரதி உயர் ஸ்தானிகர் அவர்களின் உரைக்கு முன்னர் 2022-23 நிதியாண்டுக்கான இந்தியாவின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. இக்கலந்துரையாடலில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
from tkn