படையினர் வசம் உள்ள காணிகளை மீள கையளிப்பது தொடர்பான கலந்துரையாடல்

இவ்வருட இறுதிக்குள் உரியவர்களிடம் வழங்குவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிப்பு

இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மீள கையளிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று புதன்கிழமை (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது, கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மீள கையளிப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது தனியார் காணிகள், கட்டிடங்கள், அரச காணிகள், அரச கட்டிடங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடங்கள் போன்றவற்றில் சில இன்னமும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படாமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, கோறளைப்பற்று மத்தி, கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்னமும் தனியார் மற்றும் அரச காணிகளில் படையினர் நிலைகொண்டிருப்பதனால் மக்களது இயல்பு வாழ்வில் தடங்கள் இருப்பதாக பிரதேச செயலாளர்களினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் தம்வசம் உள்ள காணிகளில் பெரும்பாலான பகுதிளை இவ்வருட இறுதிக்குள் உரிய நபர்களிடம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் 231 வது படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் திலீப பண்டார, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, காணிப்பிரிவிற்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நே.விமல்ராஜ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, முப்படையினர் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டின் போது உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துதல், படையினரிடம் உள்ள அரச, தனியார் நிறுவனங்களின் காணிகள் மற்றும் கட்டடங்களை மீள கையளித்தல் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரெட்ண மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.

(கல்லடி குறூப், ஆரையம்பதி தினகரன், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்)

 
Fri, 08/13/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை