முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கேலிச்சித்திரத்தை வரைந்து முஸ்லிம் உலகின் கோபத்தை தூண்டிய டென்மார்க் கேலிச்சித்திர கலைஞர் கார்ட் வெஸ்ட்கார்ட் தனது 86ஆவது வயதில் காலமானார்.
நீண்ட காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் அவர் மரணித்ததாக அவரது குடும்பத்தினரை மேற்கோள்காட்டி பேர்லிங்கே பத்திரிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.
1980களின் ஆரம்பத்தில் இருந்து ஜிலன் - போஸ்டன் பத்திரிகையில் கேலிச்சித்திர கலைஞராக பணியாற்றிய அவர், 2005 ஆம் ஆண்டு பத்திரிகையில் முஹம்மது நபி (ஸல்) தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரத்தை வரைந்து உலகப் புகழ் பெற்றார்.
தலைப்பாகையில் குண்டு இருப்பது போன்று சித்தரிக்கும் வெஸ்ட்கார்ட்டின் கேலிச்சித்திரம் அந்தப் பத்திரியால் வெளியிடப்பட்ட 12 சித்திரங்களில் ஒன்றாக இருந்தபோதும் அது இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்ததோடு சுய தணிக்கை பற்றிய அழுத்தங்களை ஏற்படுத்தியது. முஹம்மது நபி (ஸல்)யை சித்தரிக்கும் படங்கள் முஸ்லிம் சமூகத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாக இருப்பதோடு சில முஸ்லிம்கள் அதனை ஒரு குற்றமாக பார்க்கின்றனர்.
இதன் காரணமாக 2006 பெப்ரவரியில் முஸ்லிம் உலகெங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. டென்மார்க் தூதரகங்கள் தாக்கப்பட்டு பல டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
from tkn