தலிபான்களின் முன்னேற்றத்திற்கு மத்தியில் ஆப்கானில் பொதுமக்கள் உயரிழப்பு உச்சம்

6 மாதங்களில் 1659 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

நிகழாண்டின் முதல் பாதி காலத்தில் இதுவரை இல்லாத அளவு பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தங்களது படையினரை திரும்பப் பெறத் ஆரம்பத்துள்ளன. இந்தப் படை விலகல் ஆரம்பித்த கடந்த மே மாதத்திலிருந்து அந்நாட்டில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த சில வாரங்களாக அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். சில மாகாண தலைநகரங்களும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில் உயிரிழந்தோர் குறித்து அந்நாட்டுக்கான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி டெபோரா லயோன்ஸ் திங்கள்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பது:

2021ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்கள் 1,659 போ் கொல்லப்பட்டுள்ளனர்; 3,254 போ் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 47 வீதம் அதிகமாகும். உயிரிழப்பில் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை 46 வீதம் ஆகும். அதாவது 468 குழந்தைகள் (32 வீதம்), 219 பெண்கள் (14 வீதம்) உயிரிழந்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் மே மற்றும் ஜூனில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாதங்களில் மட்டும் 783 போ் கொல்லப்பட்டுள்ளனர்; 1,609 போ் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடா்பாக 2009ஆம் ஆண்டுமுதல் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமுதல் பார்த்தால் இப்போதைய பாதிப்புத்தான் அதிகமாகும். வன்முறையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் இதுவரை இல்லாத அளவு அதிக உயிரிழப்பு நிகழாண்டில் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தலிபான்களும் ஆப்கன் தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். ஆப்கன் மக்களைப் பாதுகாத்து, சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவா்களுக்கு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: ஆப்கானிஸ்தானில் மே, ஜூன் மாதங்களில் பெரும்பாலும் நகரப் பகுதிகளுக்கு வெளியேதான் தலிபான்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த நகரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்தால் அதனால் ஏற்படும் விளைவு பேரழிவைத் தரும்.

பொதுமக்கள் உயிரிழப்பில் 69 வீதம் அரசுக்கு எதிரான படையினரே காரணம். இதில் 39 வீத உயிரிழப்பு தலிபான்களாலும், 9 வீதம் ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) இயக்கத்தினராலும் ஏற்பட்டுள்ளது. 16 வீத உயிரிழப்புக்கு யார் காரணம் என்பது தீா்மானிக்கப்படவில்லை. அரசுப் படைகளால் 23 வீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களால் 2 வீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Wed, 07/28/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை