ஊடக அடக்குமுறைக்கு அரசாங்கம் நடவடிக்கை

நிறுத்தக்கோரி சபையில் சஜித் விசேட கூற்று

 

ஊடக அடக்கு முறைக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையை நிறுத்தக்கோரி எதிர்க்கட்சியினர் நேற்று சபையில் எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்திவரும் தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றை அடக்குவதற்கும் அதன் அனுமதி பத்திரத்தை தடைசெய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த ஊடகம் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதுடன் நாட்டின் தற்போது கொவிட்19 காரணமாக மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினை, உரம் கிடைக்காததால் விவசாயிகள் வீதிக்கிறங்கி மேற்கொள்ளும் போராட்டங்களை வெளிப்படுத்தி அரசாங்கத்துக்கு மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வருகின்றது.

இவ்வாறு இந்த தனியார் ஊடகம் ஆளும், எதிர்க்கட்சிகளின் வேலைத்திட்டங்களையும் மக்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் பக்கச் சார்ப்பின்றி வெளியிட்டு வருகின்றது. இவ்வாறு செயற்பட்டுவரும் ஊடக நிறுவனத்தை அடக்கி, அதன் ஊடக அனுமதி பத்திரத்தை தடைசெய்ய அரசாங்கத்திலிருக்கும் சிலர் செயற்பட்டு வருவதை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். அதனால் அரசாங்கம் அவ்வாறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை யென்ற உத்தரவாதத்தை பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், மஹாராஜா நிறுவனத்தை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக எதிர்க்கட்சி தலைவர் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இந்த விடயம் உண்மையா, இல்லையா என்பது தொடர்பில் ஆளுங்கட்சி பிரதம அமைப்பாளர் பதில் சொல்லவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கு பதிலளிக்கும்வகையில் தெரிவிக்கையில்,

எந்தவொரு ஊடகத்தையும் அடக்குவதற்கோ தடைசெய்வதற்கோ அரசாங்கம் தீர்மானித்ததில்லை. அவ்வாறு ஏதாவது அறிக்கைகள் இருந்தால் அதனை சபைக்கு சமர்ப்பிக்கவேண்டும். அத்துடன் ஊடகங்களை அடக்குவது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பொன்றையோ கட்டளை ஒன்றையோ பிறப்பித்ததில்லை. அதனால் எதிர்க்கட்சியினர் சர்வதேசத்தின் சதித்திட்டத்துக்கான வேலைத்திட்டத்தையே மேற்கொள்கின்றனர் என்றார்.

அத்துடன் அரசாங்கம் ஊடக அடக்குமுறையை மேற்கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்தை ஆதரித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க, வேலுகுமார், முஜிபுர் ரஹ்மான், நளின் பண்டார, புத்திக்க பத்திரண ஆகியோரும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துடன் ஊடகங்களை அடக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

 

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியன் நிஷாந்தன்

Thu, 07/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை