கொழும்பில் மேலும் சில பகுதிகளில் இந்திய “டெல்டா”

அதிதீவிர ஆராய்ச்சியில் சுகாதாரப்பிரிவு மும்முரம்

இந்திய உருமாறிய “டெல்டா” வைரஸ் என அடையாளம் காணப்பட்டமையால் சந்தேகம்

வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

கொழும்பு - 2, மாதிவெல பிரதேசத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மாதிரியொன்று அசாதாரணமான தன்மையுடையதாகக் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த மாதிரி மரபணு பரிசோதனைக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அசாதாரண தன்மையுடையதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மாதிரியில் டெல்டா வைரஸ் இனங்காணப்படலாம். அல்லது வேறொரு நிலைமாறிய வைரஸ் இனங்காணப்படலாம். எதிர்பாராத விதமாக புதியதொரு வைரஸாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்படும் பகுதிகள் தொடர்பில் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு - 2 , கொம்பனி வீதியை அண்மித்த , மாதிவெல - ப்ரகதிபுற பிரதேசத்தில் நபரொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரி அசாதாரண தன்மையுடன் சதேகத்திற்கிடமானதாகக் காணப்படுவது இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறு இனங்காணப்படும் மாதிரிகள் தொடர்பில் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த நபரது மாதிரியில் மாத்திரமே இவ்வாறு அசாதாரணமான நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நிலைமை உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தெமட்டகொட பிரதேசத்திலும் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்பட்டமையினாலேயே அந்த பகுதி கடும் கட்டுப்பாடுகளுடன் முடக்கப்பட்டது. அப்பிரதேசம் முடக்கப்பட்டு சுமார் ஒரு வாரத்தின் பின்னரே டெல்டா வைரஸ் இனங்காணப்பட்டது. அதே போன்ற நிலைமையே தற்போதும் ஏற்பட்டுள்ளது.

அசாதாரண தன்மையுடையதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மாதிரியில் டெல்டா வைரஸ் இனங்காணப்படலாம். அல்லது வேறொரு நிலைமாறிய வைரஸ் இனங்காணப்படலாம். எதிர்பாராத விதமாக புதியதொரு வைரஸாகக் இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்படும் பகுதிகள் தொடர்பில் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தவிர்க்க முடியாதது.

தெமட்டகொட டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்டவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் அதற்கான வாய்ப்புக்கள் பல காணப்பட்டன. தற்போது சுமார் 80 நாடுகளில் இந்த டெல்டா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.

இவற்றில் எந்தவொரு நாட்டிலிருந்தும் மக்கள் நாட்டுக்கு வருகை தர முடியும். இவ்வாறு வரும் நபர்கள் ஊடாக நிலைமாறிய வைரஸ் இலங்கைக்குள் வரக்கூடும்.

இது தவிர இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் நாட்டுக்கு வருபவர்கள் ஊடாகவும் டெல்டா வைரஸ் தொற்றியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இந்த வைரஸ் இனங்காணப்பட்டது. இவ்வாறானதொரு வைரஸ் இனங்காணப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரே இந்தியா பாரிதொரு தொற்று பரவலை எதிர்கொண்டது.

இந்தியாவில் இந்த வைரஸ் இனங்காணப்பட்ட காலப்பகுதியில் அந்நாட்டிலிருந்து மக்கள் இலங்கைக்கு வந்துசென்றனர்.

எனவே எம்மால் ஸ்திரமாகக் கூற முடியாவிட்டாலும் , இவ்வாறு ஏதேனுமொரு வழியில் டெல்டா வைரஸ் நாட்டுக்குள் பிரவேசித்திருக்கக் கூடும் என்று அனுமாணிக்கலாம். டெல்டா வைரஸ் தொற்றாளர் இதுவரையில் வேறு எந்த பிரதேசங்களிலும் இனங்காணப்படவில்லை.

ஆனால் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏனைய பகுதிகளில் டெல்டா பரவியுள்ளதா என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை