பாராளுமன்றம் கூடுவது குறித்து இன்று தீர்மானம்

பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வாரம் நடத்துவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (21) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு நாளை 22ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைவிட, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் இன்று முற்பகல் 11.30க்கு கூடவிருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு இன்று பிற்பகல் 2.30க்கு அதன் தலைவர் சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் கூடவிருப்பதாகவும் தஸநாயக குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பது தொடர்பில் பொது மக்களின் பரிந்துரைகள் ஜூன் மாதம் 19ஆம் திகதி வரை பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை