சேதன குப்பைகளை இயற்கை உரமாக்கும் தொழிற்சாலை

ஜெய்க்கா நிறுவன உதவியுடன் வேலைத்திட்டம்

யாழ். வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா நிதியில் உருவாக்கப்பட்ட சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் இந்த தொழிற்சாலை மூலம் பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் 09 மாகாணங்களுக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை (27) மதியம் 02.00 மணிக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளை கரவெட்டி பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.

யாழ். குறூப் நிருபர்

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை