ஆயுர்வேத வைத்தியர்கள், சுகாதார, போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவோர்களுக்கு தடுப்பூசிகள் அத்தியாவசியம்

- விரைவுபடுத்த டக்ளஸ் கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற ஆயுர்வேத வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையுடன் சம்பந்தப்பட்டிருக்கின்ற அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போது கடற்றொழில் அமைச்சரினால் இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்ற போதிலும் ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாத நிலையில், ஆயுர்வேத வைத்திய மையங்கள் சிலவற்றில் கொரோனா கண்டறிப்பட்டுள்ளதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார். 

அதேபோன்று வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, ஆயுர்வேத வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதேபோன்று, பொதுப் போக்குவத்தில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Wed, 05/19/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை