மறைந்த ஆயருக்கு சபையில் TNA அஞ்சலி

சார்ள்ஸ் எம்.பி இரங்கல் தெரிவிப்பு

இயற்கை எய்திய மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அஞ்சலி செலுத்தினார்.  எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உலக நாடுகளுக்கு தமிழ் மக்களின் சாட்சியாக தன்னை பதிவு செய்தவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை சிறப்பு அனுமதி பெற்றே சார்ள்ஸ் எம்.பி இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நித்திய இளைப்பாறிய மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுடைய திருவுடல் மன்னார் மறைமாவட்ட பேராலயமாகிய புனித செபஸ்தியார் பேராலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் இன்று மாலை (05) அடக்கம் செய்யப்படவுள்ளது. ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக எமது அஞ்சலியையும் இறை வணக்கத்தையும் தெரிவித்து நிற்கின்றேன். யுத்த காலங்களில் எமது தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஆபத்துக்களை எதிர்த்து நின்று தகர்த்து, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உலக நாடுகளுக்கு தமிழ் மக்களின் சாட்சியாக தன்னை பதிவு செய்த ஓர் ஆண்டகையாவார். அவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என சபையில் தெரிவித்தார்.

Tue, 04/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை