இந்த சூழலும் புத்தாண்டுடன் வசந்தகாலமாக மாறும்

- சபாநாயகர் மஹிந்த யாப்பா வாழ்த்து

உலகளாவிய பிரச்சினை மூலம் ஒற்றுமை மற்றும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்வதன் பெறுமதி மனித குலத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்பதே எமது கருத்தாகும். இந்த சூழலும் புத்தாண்டுடன் வசந்தகாலமாக மாறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மலரவிருக்கும் புத்தாண்டு இலங்கையர்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த கலாசார பண்டிகையாகும். இது நாம் கலாசாரம் மிக்க மனிதர்கள் என்ற ரீதியில் பல்லாயிரம் வருடங்களாக நமக்கிடையில் பேணிவரும் பிணைப்பிற்கான சான்றாகும்.

ஒவ்வொரு புத்தாண்டிலும் போன்று இவ்வருடமும் ஒரே நாடாக ஒரே தருணத்தில் முன்னெடுக்கும் சடங்குகள் நமது ஒற்றுமைக்கு ஒரு சான்றாகும். இந்த சடங்குகளை நிறைவேற்றும் எம் அனைவரினதும் ஒரே பிரார்த்தனை நிலைபேறான சுபீட்சமாகும். இதனை வெறும் பிரார்த்தனையாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் புத்தாண்டின் பின்னரும் நாம் அனைவரும் நாட்டுக்காக உழைக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.

இவ்வாறு எந்தவொரு குடும்பத்திலும் பின்பற்றப்படும் சடங்குகள் ஊடாக அதன் மதிப்புக்கள் அடையாளப்படுத்தப்படுவது மட்டும் அல்லாமல் இதனூடாக பெறுமதிமிக்க செல்வம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்படுகின்றது என்பதை பெரியவர்களாக நாம் நினைவில்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் நொடிப்பொழுதில் உலகையே அறியக்கூடியக் இயலுமை கொண்ட இளைஞர்களுக்கும், சிறுவர் சிறுமியருக்கும் இந்த சடங்குகளின் பின்னணியில் உள்ள அடிப்படைகளை எடுத்துக் கூறவேண்டும். இது எமது நாட்டுக்காக மேற்கொள்ளும் எதிர்கால முதலீடு என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த ஆண்டுகளில் புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள், விரக்திகள் இலகுவில் மறக்கமுடியாதவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனினும், கொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அவ்வாறான உலகளாவிய பிரச்சினை மூலம் ஒற்றுமை மற்றும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்வதன் பெறுமதி மனித குலத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்பதே எமது கருத்தாகும்.

இந்த சூழலும் புத்தாண்டுடன் வசந்தகாலமாக மாறும். அதனால், ஏனையவர்கள் குறித்து சிந்திக்கும் ஒரு புதிய மனிதராக இந்தப் புத்தாண்டில் நாட்டின் நலனுக்காக நீங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட வேண்டும் என்பதே எனது புத்தாண்டின் பிரார்த்தனையாகும்.

இலங்கையர்களாகிய நீங்கள் அனைவரும் சுபீட்சமான எதிர்காலத்தை அடைய இனிய சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Wed, 04/14/2021 - 10:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை