பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் உருவாக்கப்பட்டு வருகிறது.
பிரேசிலின் என்காண்டாடு நகரில் 140 அடியில் இந்த சிலை உருவாக்கப்படவுள்ளது. இது உலகின் மூன்றாவது உயரமான இயேசு கிறிஸ்து சிலையாக இருக்கும்.
இந்த சிலையின் நிர்மாணம் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் தலை மற்றும் விரிந்த கைகள் கடந்த வாரம் உருவாக்கப்பட்டது.
இந்த யோசனை அர்ரொல்டூ கான்சாட்டி என்ற உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் வழங்கப்பட்டது. அவர் கடந்த மார்ச் மாதம் கொவிட்–19 தொற்றால் உயிரிழந்தார்.
மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த சிலையின் நிர்மாணம் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருவதாகவும் இதனை நிர்மாணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு கையிலிருந்து மற்றொரு கை வரை இந்த சிலை 36 மீற்றர் அகலம் கொண்டது. மேலும் மார்பு பகுதியில் பார்வையாளர்கள் காணும் பகுதி உருவாக்கப்படும். இது தரையிலிருந்து 40 மீற்றர் உயரம் கொண்டது.
இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள பண்ட்டு புராக்கே சிலை 52.55 மீற்றர் உயரம் கொண்டது. போலாந்தில் உள்ள `கிறிஸ்ட் த கிங்` சிலை 52.5 மீற்றர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற ரீடிமர் சிலையின் உயரம் 38 மீற்றர். இருப்பினும் உலகளவில் டஜன் கணக்கான உயரமான பல சிலைகள் உள்ளன. அதில் கன்னி மேரி மற்றும் புத்தர் சிலைகளும் அடக்கம்.
from tkn