ஆயிரம் ரூபாவை பெற்று கொடுக்க நடவடிக்கை

செந்தில் தொண்டமான் தெரிவிப்பு; கம்பனிகளும் இணக்கம்

அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்று, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்ட புகாரை அடுத்து, அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கான மேலதிக நிதியைத் திறைசேறியிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக, விவசாய அமைச்சும் பெருந்தோட்ட அமைச்சும் இணைந்து, கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்த வாரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, செந்தில் தொண்டமானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், திறைசேறியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நிதியை, அந்தந்த தோட்ட நிர்வாகங்களிடம் கையளித்து, நிலுவைச் சம்பளத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செந்தில் தொண்டமானிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஓரிரு வாரங்களுக்குள், அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Mon, 04/19/2021 - 06:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை