மேலதிக கொழுந்திற்கான 40 ரூபாய் கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்படும்

ஆயிரம் ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த இ.தொ.கா விற்கு மேலதிக கொழுந்திற்கான 40 ரூபாய் கொடுப்பனவை எவ்வாறு பெற்றுக் கொடுப்பதென்று தெரியும் என பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதல் இன்று வரை இ.தொ.கா மக்கள் உரிமைகளை போராடிப் பெற்றுக் கொடுத்ததாகவே சரித்திரம் உள்ளது. மற்றவர்களை போல் கையேந்தி நின்றதாக சரித்திரம் இல்லை.

தற்போது கொழுந்து அதிகமாக இருக்கும் காலம் எனவே மக்களின் மேலதிக கொடுப்பனவு விடயத்தில் கம்பனிகள் மாற்று வழியின்றி அடிபணிந்து தான் செல்ல வேண்டும். மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் முன்மொழிவுக்கு அமைய 1000ரூபாவிற்காக இ.தொ.கா முழுமூச்சுடன் செயற்பட்டு 1000ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்தது போல, முழுமையான கொடுப்பனவுகளும் பெற்றுத்தரப்படும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஊவா மாகாணத்தில் உள்ள பல தோட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டு, மக்களுடன் கலந்துரையாடியதுடன், தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்காத தோட்டங்களில் இனிவரும் காலங்களில் மேலதிக வேலைகளில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என தெட்டத்தெளிவாக அந்த, அந்த தோட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Mon, 04/12/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை