ரூ. 1000 சம்பளம்; தொழில் அமைச்சர் உட்பட 20 பேருக்கு அழைப்பாணை

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக தீர்மானித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கக் கோரி தோட்டக் கம்பனிகளினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே 5 ஆம் திகதி மேற்கொள்வதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம் பிரதிவாதிகளான தொழிலமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினரை விடயங்களை முன்வைக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

அதேவேளை, மேற்படி மனுமீதான விசாரணை மே மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் மேற்படி மனு தொடர்பான எதிர்ப்புகளை இம் மாதம் 27ஆம் திகதி மற்றும் மீளெதிர்ப்பு மனுக்களை மே 4 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜுண ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாம் மேற்படி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம், எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 நிறுவனங்கள் மேற்படி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தன. அதற்கிணங்க மனுவில் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் பிரபா சந்திர கீர்த்தி மற்றும் தேயிலை கைத்தொழில் தொடர்பான சம்பள சபையின் தலைவர் உள்ளிட்ட 18 நபர்களது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அண்மையில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை