மொசம்பிக்கின் வட மாகாணமான கபோ டெல்காடோவில் 11 வயதான சிறுவர்களும் இஸ்லாமியவாத குழுவால் தலைதுண்டித்து கொல்லப்படுவதாக சிறுவர்களை பாதுகாப்போம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தனது 12 வயது மகன் கொல்லப்பட்டதாக தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தனது ஏனைய பிள்ளைகளுடன் ஒளிந்திருந்த நேரத்தில் அந்த சிறுவன் இவ்வாறு கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொசம்பிக்கில் 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்த இஸ்லாமியவாதிகளின் கிளர்ச்சியை அடுத்து 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 700,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புபட்டவர்களே அங்கு வன்முறையில் ஈடுபடுவாக கூறப்படுகிறது.
இந்த வன்முறையில் இருந்து தப்பி வந்தவர்கள் தாம் சந்தித்த கொடூர அனுபவங்கள் பற்றி சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பிற்கு தெரிவித்துள்ளனர்.
தான் தனது ஏனைய பிள்ளைகள் ஒளிந்திருந்த இடத்திற்கு அருகில் தனது மூத்த மகன் தலை துண்டிக்கப்பட்டதாக தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 'அந்த இரவில் கிராமம் தாக்கப்பட்டு வீடுகள் தீமூட்டப்பட்டன' என்று அவர் குறிப்பிட்டார்.
தனது 11 வயதான மகன் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்திற்காக ஊரை விட்டு வெளியேறியதாக மற்றொரு தாய் குறிப்பிட்டுள்ளார். அல் ஷபாப் என்று உள்ளூர் மக்கள் அழைக்கும் இந்த குழு இஸ்லாமிய அரசுக்கு தமது விசுவாசத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த குழு மொசம்பிக்கில் பல தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த கிளர்ச்சிக் குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
from tkn