கொவிட் இற்கு மத்தியில் பொருளாதார இலக்குகளை அடைவதே நோக்கம்

- லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர்

உலகளாவிய கொவிட் 19 தொற்று நெருக்கடிக்கு மத்தியில் புத்தாண்டில் பொருளாதார இலக்குகளை அடைவதே  லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நோக்கமென நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்ன நேற்றுத் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கல்வி வெளியீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 13 கல்வி வெளியீடுகள் மூன்றாம் கட்டமாக ஆங்கிலம் மற்றும் சிங்கள ஊடகங்களில் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவால் நாளை காலை வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்தப் பணியை வெற்றிகரமாக செய்ய லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் நிறுவன பணிப்பாளர் குழு மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 2019 டிசம்பர் 16 அன்று நான் தலைவராகவும் மேலும் மூன்று பேர் நிறுவன பணிப்பாளர்களாவும் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தோம். 

அத்தருணத்தில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நிறுவனத்தின் கடன் சுமை 400 மில்லியனுக்கும் அதிகமாகவும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை 600 மில்லியனுக்கும் அதிகமாகவும் இருந்தன. நாங்கள் பொறுப்பேற்று நிர்வாகத்துடன் இணைந்து கடன் சுமையைக் குறைக்க ஏனைய அரச நிறுவனங்களுக்குச் சென்று விளம்பரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டோம், அதற்கு அவர்கள் சாதகமாக பதிலளித்து ஒப்புக் கொண்டனர்.

இருப்பினும், 2020ஆம் ஆண்டு முழு உலகம் முழுவதையும் பாதித்த கொவிட்19 தொற்று மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் நம் நாட்டை பாதித்தது, பொது மற்றும் தனியார் துறைகள் வீழ்ச்சியடையத் தொடங்கின, 100 ஆண்டுகளுக்கும் மேலான அச்சிடும் வரலாற்றைக் கொண்ட லேக்ஹவுஸின் அச்சகம் 52 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. முதல் முறையாக, அச்சிடும்பணி மாதத்திற்கும் மேலாக முழுமையாக நிறுத்தப்பட்டது.

இ-செய்தித்தாள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைத்தன, ஆனால் அதிலிருந்து வருவாய் எதுவும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.200 மில்லியன் இழப்பை சந்தித்தது. இருப்பினும், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, மார்ச் மாதத்தில் செலுத்த வேண்டிய போனஸும் செலுத்தப்பட்டது.

ஏப்ரல் முதல் இன்றுவரை, பணிப்பாளர் சபை மற்றும் நிர்வாகத்தினர் முகாமையாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன, மேலும் ஏப்ரல் மாதத்தில் கடுமையான பொருளாதார கஷ்டங்கள் ஏற்பட்டமையின் காரணமாக, பணிப்பாளர் சபை அந்த மாதத்திற்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளவும் இல்லை.

செய்தித்தாள் அச்சிடுதல் பணி மீண்டும் 2020 மே மாதத்தில் தொடங்கப்பட்டது, அத்தருணத்தில் எதிர்பார்த்தளவில் செய்தித்தாள் விற்பனை மற்றும் பிற விளம்பரங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

2020 மார்ச் மாதத்தில் நாங்கள் பல கல்வி வெளியீடுகளை அச்சிட நடவடிக்கை எடுத்தோம், அவற்றில் முதலாவது ‘முத்து ஹவுர’ என்ற வெளியீடு 1,2,3,4, மாணவர்களுக்கும் சாதாரண தர மாணவர்களுக்காக ‘சித்மின’ செய்தித்தாளும் புலமைப்பரிசில் மாணவர்களுக்காக ‘விதுனென’ செய்தித்தாளும் ‘குட்டிச் சுட்டி’ செய்தித்தாள்களும் மிகவும் வெற்றிகரமாக விற்பனைக்காக தொடங்கப்பட்டன. ஆனால், அக்டோபர் முதல் மேல் மாகாணம் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டதால், விற்பனை குறைந்தது.

நாங்கள நிர்வாக பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வணிக அச்சிடும் துறையில் மீண்டும் செயற்பாடுகளை தொடங்கியது, இந்த விடயம் முந்தைய 04 ஆண்டுகளாக கவனிக்கப்படவில்லை. அச்சிடும் செயற்பாட்டில் ஒரு நல்ல வருமானத்தை ஈட்ட முடிந்தது.

கடந்த அக்டோபர் முதல், தொற்று கடுமையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது, ஊழியர்களின் வருகையை கட்டுப்படுத்தியதுடன், வீட்டிலிருந்து வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டது. அத்தியாவசிய நபர்களை அழைத்து போக்குவரத்து வசதிகள் மற்றும் நிறுவனத்தில் சுகாதார பாதுகாப்புகளையும் வழங்கினோம். பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் சோதனைகள் நிறுவனத்தின் செலவில் மேற்கொள்ளப்பட்டன, எதிர்காலத்தில் இது தொடரும்.

2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு நிலுவைத் தொகை உள்ளிட்ட சில நிலுவைத் தொகையை செலுத்த நிறுவனத்தில் நிதி இல்லாததால் வெகுஜன ஊடக அமைச்சரை சந்தித்து கடந்த நவம்பர் முதல் பெப்ரவரி வரையான 04 மாதங்களுக்கு ரூ.50 மில்லியன் அரசு உதவித் தொகையை வழங்குமாறு கேட்டுக் கொண்டோம்.

அவர் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அமைச்சரவையில் கோரிக்கை விடுத்தார், ஆனால் அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. என்றாலும், நாங்கள் மீண்டும் பிரதமரை சந்தித்து உண்மைகளை எடுத்துரைத்து இந்த மாதம் மீண்டும் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு கொடுப்பனவை பெற தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

எவ்வாறாயினும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்க்கைச் செலவு தொகையை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதில் பணிப்பாளர்கள் குழுவும் நிர்வாகமும் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைச் செலவுத் தொகையை எப்படியாவது செலுத்துமாறு நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. ஊழியர்களின் நிதியிலிருந்து இத் தொகையைத் பெற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் அதை செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் இம்மாதம் முதல் மேலதிகமாக 2,000 ரூபா ஊழியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றார்.
 

Tue, 01/05/2021 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை