விசேட செயற்திட்டம் ஆரம்பம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன
சுகாதார வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றதா? என்பதை ஆராயும் வகையில் நேற்று முதல் விசேட செயற்திட்டமொன்றை மேல் மாகாணத்தில் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் சூழ்நிலையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கடந்த வருடம் அக்டோபர் 15ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கிணங்க எந்த ஒரு நிறுவனம்,அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளிலும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க செயற்பாடுகள் நடைபெறாத பட்சத்தில் அது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க கைகளை கழுவுவதற்கு இடம் ஒன்றை ஏற்பாடு செய்திருத்தல், உடல் உஷ்ணத்தைஅளவீடு செய்தல், பெயர் பட்டியலை காட்சிப்படுத்தல், இடைவெளி பேணுதல்,ஒரு நாளில் பல தடவைகள் உடல் உஷ்ணத்தை அளவிடுதல் போன்றவை அந்த நடைமுறைகளாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேற்படி விடயங்களை அலட்சியம் செய்தல்தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான குற்றம் என்றும் அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn