கல்முனை பிரதான நகரம் மற்றும் பொதுச்சந்தை போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக பாண்டிருப்பு பொதுச்சந்தையில் சனநெரிசல் அதிகமாக காணப்பட்டது.
இதனையடுத்து குறித்த சந்தைப்பகுதிக்கு திங்கட்கிழமை (11) விஜயம் செய்த சுகாதார தரப்பினர் குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்த பொதுமக்கள் என 201நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இப் பரிசோதைனையின் போது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை குறித்த அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்ற பாண்டிருப்பு பிராதான வீதி நேற்றுமுன்தினம் காலை குறிப்பிட்ட நேரம் வரைக்கும் மறிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.
(பெரியநீலாவணை விசேட நிருபர்)
from tkn